வெள்ளி, 9 நவம்பர், 2018

தீயைத் தின்பவள்.

இவள் தனது பார்வையைத் தாழ்த்தி
நிலத்தை விழுங்கிக்கொண்டு நடக்கப்பழகி
நீண்ட நாட்களாகி விட்டன.

பேராவல்களும் பெருஞ்சிக்கல்களும்
சூழ்ந்துண்ட இச்சமூகப் பெருவெள்ளத்தில்
இவள் தனித்தலையும் ஒற்றை ஆத்மா.

காலம் இவளைத் தனது கால்களின் கீழ்வைத்து
முற்பிறப்பின் பழி தீர்ப்பது போல
மெதுவாகப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

இவள் வெற்றுவாய் மனிதரின்
சொற்களென்னும் தீயைத்
தினமும் தின்று நடமாடுமொரு கூடு.

வி. அல்விற்.
09/11/2018.



ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

இரகசியக் கண்ணீர்.

இரகசியக் கண்ணீர்.

போரொன்று வந்து முன்னால் 
வேரறுப்பேனென்று சொல்ல
போகவழி ஏதுமின்றி
காற்றிலாடும் சருகுபோல
கால் போன வழியெங்கும் 
அலைந்ததுவும் அக்காலமதே.

அறிவொன்று சொல்லி நிற்க 
மனமொன்றை விரும்பிச் செல்ல
ஒத்துவரா மாடுகளை ஒருவண்டியிற்
பூட்டியதில் சீரென்று சொல்லாத
நெடியதொரு பயணத்தை 
நெடுமூச்சொடு தொடங்கி வைத்தோம்.

உயிரொன்று பெரிதன்றோ! அதன்
வாழ்வும் அதின் மேலன்றோ!
கண்டங்கள் தாண்டியவிடத்தில்
உடலெங்கோ தங்கி நிற்க 
மனமெங்கோ அலைக்கழிய
இரட்டை வாழ்க்கை மட்டும்
இருளாய் மூடிப்போச்சே.

“பத்திரமாய் போய்வா” என்றன்றைய
அவசரத்தில் அனுப்பிவைத்த அம்மாவின் 
பயங்குவிந்த தொண்டை இன்றோ
பேச சக்தியற்று வரண்டு கிடக்கிறது.
“கதையுங்கோ அம்மா” என்ற கேள்விக்கு
பதில் சொல்ல இயலாமையில்
முதுமையின் பயம் அங்கே விக்கித்து நிற்கிறது.

சுகமாய் இருப்பேனோ இல்லை சோர்ந்து மடிவேனோ?
படுக்கையில் வீழ்வேனோ இல்லை பார்ப்பாரற்றுக் கிடப்பேனோ?
சொட்டுத் தண்ணிதர யார்தான் வருவாரோ?
சொர்க்கமென்று பெற்ற மக்கள் வந்து சேருவரோ?
சாகும் வேளைதனில் யார்மடி கிட்டுமோ?
யார் முகம் பார்த்து கண்ணை மூடுவேனோ?

ஆயிரம் குமுறல்கள் உள்ளேயிருப்பினும்
கண்டம் விட்டு வந்தவருடன் காட்ட முடியுமோ?
சொற்களெல்லாம் அமுங்கிவிட
இரகசியமாய்….
இரண்டு சொட்டுத்துளிகள்
முதுமைக் கண்களின் கடையோரத்தில்…

ஒரு வருடம் ஓடியுழைத்து
உறவு காண வேண்டுமென்று
ஒருமாத விடுமுறையில் ஓடிவந்த பிள்ளைகளும்
மூட்டையைக் கட்டுகின்றனர் மூக்கைச் சிந்தியபடி.

மீண்டும்..மீண்டும்..
உடலெங்கோ தங்க……
மனமெங்கோ அலைய….

இரகசியமாய்
கண்களில் கண்ணீர்த் துளிகள்.

வி. அல்விற் 

13/08/2018

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

Pão de santo Antonio!

Pão de santo Antonio!

அண்மையில் போர்த்துக்கலுக்கு விடுமுறைப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. போர்த்துக்கல் என்றாலே எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருவது Fatima அன்னையின் ஆலயமே.
நாங்கள் லிஸ்பொனுக்கே நமது பயணத்தை மேற்கொண்டிருந்தோம். பார்க்க வேண்டியிருந்த பல இடங்களையும் முன்னரே திட்டமிட்டிருந்ததால் போய்ச்சேர்ந்தவுடன் அதற்கேற்றபடி உலாவத் தொடங்கியிருந்தோம். பிரான்சோடு ஒப்பிடும்போது போக்குவரத்துச் செலவுகள் கொஞ்சம் குறைவாகவே இருந்தன. தூரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால் மட்டுமே பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி பின்னர் நாள் முழுக்க நடந்து கொண்டேயிருந்தோம். நடந்து போகும்போது நாம் அறியாத இடங்களையும் அறிய முடிந்திருந்தது.
எமது பயணத்தில் ஒருநாளை நமது புனித அந்தோனியாருக்காகவும் ஒதுக்கியிருந்தோம். அப்பயணம் பற்றிய விடயங்களை என்னுடன் பணிபுரியும் போர்த்துக்கலைச் சேர்ந்த நண்பர்களிடம் கேட்டறிந்துகொண்டு சென்றது நல்ல பயனையும் அலைச்சலின்மையையும் கொடுத்தது.
புனித அந்தோனியாரின் வரலாறு அனேகர் அறிந்ததே. அவரது இயற்பெயர் Fernando Martins de Bulhões. (Bulhões என்பது குடும்பப்பெயர்). 1195 இல் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பொன் நகரத்தில் வசதியான ஒரு குடும்பத்திலேயே பிறந்த இவர் இளமையிலேயே நல்ல புத்திசாலியாகவும், இரக்க மனம் கொண்டவராகவும் இருந்தவராக அறியப்படுகிறது. வசதியான குடும்பத்திலே பிறந்தவராகையால் இளமைக்கால கல்வியை அவரது தேவைக்கேற்ற இடங்களில் கற்றுக்கொள்ளத் தடையிருக்கவில்லை. அவரது காலத்திலே நடைபெற்ற மதயுத்தங்களும் மரணங்களும் அனேகரைப்போல இவரையும் பாதித்தது.
அதன் தொடர்ச்சியாக தனது குருத்துவக் கல்வியை முடித்துக்கொண்டு குருவாகியதும் Santa 
Cruz Monastery யிலே பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையில் Fransican சபையிலும் 
தன்னை இணைத்துக்கொண்டார்.      

நல்ல பேச்சு வன்மை கொண்ட புனித. அந்தோனியார் பலராலும் அறியப்பட இத்தாலி, பிரான்ஸ் 
போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். 1230 இல் பாப்பாண்டவர்  ஒன்பதாவது கிரகரிக்கு ஆலோசகராக ரோமுக்கு அனுப்பப்பட்டார்.
ஓயாத அலைச்சல்களினால் நோய்வாய்ப்பட்டவர் இத்தாலியிலே Padoue க்குத் திரும்பும் வழியிலே தனது இறுதிக்காலத்தை மரக்கிளைகளால் கட்டப்பட்ட ஒரு குடிலுக்குள் செபிப்பதிலும்படிப்பதிலுமாக காலத்தைச் செலவிட்டார்.
1231 இல் Poor Clare monastery at Arcella ( இத்தாலியிலுள்ள Padoue இன் ஒரு பகுதி)  எனுமிடத்தில் மரணமடைந்தார்.
புனித அந்தோனியார் பல அற்புதங்களைப் புரிந்தமையாலும் அவர் இறப்பதற்கு சில காலத்துக்கு முன்னர் குழந்தை யேசுவைக் கையிலேந்திய பெரும் வரத்தைப் பெற்றமையாலும் அவரது புகழ் மேலோங்கியிருந்தது.
“Pao de santo Antonio” அதாவது “அந்தோனியாரின் பாண், அல்லது அப்பம்” என்பதற்கும் ஒரு வரலாறுண்டு.
சின்னத் தோமசின் கதை.
ஒரு நாள் ஒரு தாய், தோமஸ் என்ற பெயருடைய தனது இருபது மாதக் குழந்தையை வீட்டிலே விட்டுவிட்டு வெளியே சென்று திரும்பியபோது , அக்குழந்தை வாளி நிரம்பிய தண்ணீருக்குள் மூழ்கி இறந்து கிடந்தது. கதறியழுத தாய் குழந்தை தோமசின் உயிரை மீட்டுத்தருமாறும், குழந்தையின் எடையையொத்த பாணை பசியால் வாடுவோருக்கு தான் அளிப்பதாகவும் உரத்துச்சொல்லி புனிதரை நோக்கி இரந்து மன்றாட குழந்தை உயிர் பெற்றது. இவ்வரலாறே அந்தோனியாரின்  பெயரினால் இன்றுவரை இயங்கும் உதவி அமைப்புக்களின் தோற்றத்துக்கு வழி சமைத்திருக்கிறது.
இன்றைக்கும் இந்தப் ‘பாண்’ ஆசீர்வதிக்கப்பட்டு போர்த்துக்கலிலுள்ள அந்தோனியார் பிறந்து வளர்ந்த இடத்திலுள்ள ஆலயத்தில் விற்கப்படுகிறது. ஒரு பாண் 0,30€ தேதான். ஆனால் அது பல குழந்தைகளின் பசியாற்ற உதவுகின்றது. (கீழே படங்களை இணைக்கிறேன்) அந்தோனியாரின் பெயரால் அப்பம் கொடுக்கும் நமது வழக்கமும் இதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும்.
லிஸ்பொனில் பிறந்து இத்தாலியிலுள்ள பதுவா என்னும் நகரத்தில் 13 யூன் 1231 இல்மரணமடைந்த புனிதரின் 35 ஆண்டுகளை மட்டுமே கொண்ட வாழ்க்கை வரலாறு இவ்வாறு 
சிறப்பாக அமைந்திருக்கிறது.    
நமக்கும் புனிதர் பிறந்து வளர்ந்த இடங்களைப் பார்வையிட்டு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.


“பாதுவா நகரிலே உதித்த முனிவரே!
பாமாலை சூடினோம் பணிவாய் ஏற்பீரே!


என்ற பாடலை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. பாதுவா என்ற நகரில் புனிதர் உதிக்கவில்லை; இறந்திருக்கிறார்.

வி. அல்விற்.
25.08.2017.


ஆலயத்தின்  வெளித்தோற்றம்

 






 
 ஆலயத்தின் உட்பகுதி.













 
புனிதர் பிறந்த இடம்.  ஆலயத்தின் உட்பகுதியின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது.  











"அந்தோனியாரின் பாண்"  pão de santa antonio















































































வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

விடுவிக்கப்படும் ஊர்.


மனிதர்களை வாழ மறுத்த அந்த
மூடப்பட்ட பாதை திறக்கப்படுகின்றது.

பார்வைகளைத் திரும்பப் பெற்ற
கண்கள் ஆவலில் அலைகின்றன.

அடைக்கப்பட்ட காற்றும்
மூடப்பட்ட கடலும்
பெருமூச்சு விட்டெழுகின்றன.

ஊரசைகிறது;
உறவுகள் பேசுகின்றன.

இன்னதென்றில்லாத வார்த்தைகள்
கடந்தகால
வெற்றிடங்களை நிரப்புகின்றன.

மகிழ்ச்சி நடனமிடுகின்றது;
சீர் வரிசைகள் தயாராகின்றன.

இதோ!
ஊர் நடக்கத் தொடங்குகின்றது
புதிய புடவை கட்டிக்கொண்டு.

வி. அல்விற்.
11.02.2017.






காலம்.

காலம்.

இதை எங்ஙனம் எடுத்தியம்பவியலும்?

மௌனங்கள் வாடைக்காற்றின் வேகமெடுத்து
மேடைகளில் முழங்கிய காலங்கள்
மூச்சடைத்து முடிய,
வேகமும் வீரமும் மேலெழுந்து
தோளுயர்த்தி பலமேந்தி உச்சம் தொட்டிருந்தது
பிற்காலம்.

மலைகளிலும் காடுகளிலும்
படுத்துறங்கிக் கற்றுவந்த வீரர்களை
யாரிவர்கள் என்னும் வண்ணம்
புருவமுயர்த்தி உலகு வியப்பேந்தியது
அக்காலம்.

இழப்புகளை விழுங்கியபடியான வெற்றிகளை
குவித்தபடியான ஏறுகாலத்தில்…

யாருமே தப்பிவிடாதபடியாக
வானத்தைப் பிளந்தாற்போல
பெருமழையைப் பொழிவித்தார்கள்.

நீண்ட…..
மிக நீண்டகால வெள்ளப்பெருக்கு
அனைத்தையும் அழித்துப் போட்டது.

தனிக் கூரைகளும் தனிக்கிணறுகளும்
தமக்கென்றேயிருந்தவர்களின் கண்முன்னே
யாவுமே சமதரையாக்கப்பட்டன.

வானமே கூரையான
எங்கென்றில்லாத நிலங்களில்
உயிர்களை ஒட்டிக்கொண்டனர் மிச்சமிருந்தவர்.

செத்தவருக்குச் சமமாய் எத்தனை நாட்கள்தான்
நடிக்கவியலும்?
இதோ!
விதைகளிலிருந்து முளைத்தவை நிமிரத் தொடங்குகின்றன.

இன்னொரு காலம் இயல்பாயெழுகிறது.

* (கேப்பாப்புலவுச் சிறுவனின் பேச்சைக் கேட்டபொழுதில்).....

வி. அல்விற்.
09.02.2017.

இது www.ilctamil.com வானொலிக்காக வழங்கப்பட்ட கவிதை.
நன்றி. திரு. முல்லை அமுதன்.

சுதந்திரம்

எது சுதந்திரம்?

வாய்களைக் கட்டி
அங்கங்களை வெட்டியெறிந்து
நடைப்பிணங்களாக
உலாவ விட்டிருக்கும் உங்களுக்கு
எது சுதந்திரமாகத் தெரிகிறது?

பாட்டன் முப்பாட்டன்
காலத்துச் சொந்த நிலங்களை
பறித்தெடுத்துக்கொண்டு நம்மை
அலைய விடும் உங்களுக்கு
எது சுதந்திரமாகத் தெரிகிறது?

எமது சுதந்திரங்களை
நீங்களே வரையறுத்துக் கொள்ளுகிறீர்கள்

எமது இருப்புக்களையும்
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுகிறீர்கள்

பேசவும் அருகதையற்றவர்களே!

உங்களது அம்மணங்களே
உங்களது சுதந்திரமாக இருக்கிறது என்பதைப்
பறையறிவித்துக் கொள்ளுங்கள்!

அதுவே மிகப்பொருத்தமாயிருக்கும்.

வி. அல்விற்.
04.02.2017.

நின் சகி.

நிறமற்றோடும்
இந்நதியின் ஓட்டமென இருக்கிறாள்
நின் பிரிய சகி.

சுதந்திரமான அவள் பயணம்
வானத்தை அளந்துவரும்
ஒரு பறவைக்கொப்பானது.

மகிழ்தலும் மகிழ்வித்தலுமான
மெய்யுணர்வின் பாலுற்ற
ஒரு ஆடலுக்கிணையானது.

யாருக்கும் இடைஞ்சலற்ற
இவ்வமைதியான நெடுவழி
எங்ஙனமுன் பார்வைக்குள் சிக்கியது?

துக்கிக்காதே!
அவற்றை நின்றாய்ந்து வயலினிசைக்க
விருப்பற்றிருக்கிறாள்.

தனித்தலையவில்லை நின் சகி!
மௌனித்திருக்கிறாள்;
தன்னோடும் நினைவுகளோடும்.

வி. அல்விற்.
07.02.2017.

இது ilctamil.com வானொலிக்காக வழங்கப்பட்ட கவிதை.
நன்றி. திரு. முல்லை அமுதன்.